Press enter to see results or esc to cancel.

பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்: புஷ்பா கந்தசாமி

 தன் கதையை திருட்டுத்தனமாக விற்றதாக குற்றம்சாட்டும் பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன் என்று கூறியுள்ளார் புஷ்பா கந்தசாமி.

தான் எழுதி, இயக்கி நடித்த “இன்று போய் நாளை வா” படத்தின் கதையை தன்னை கேட்காமல், பெரிய விலைக்கு விற்றுவிட்டதாக புஷ்பா கந்தசாமி மீது இயக்குனர் கே.பாக்யராஜ் குற்றம் சுமத்தி இருந்தார்.

இதுகுறித்து பொலிசிலும் புகார் அளித்தார். இந்நிலையில் படம் நாளை வெளியாகிறது.

பாக்யராஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து புஷ்பா கந்தசாமி கூறுகையில், பாக்யராஜ் தேவை இல்லாமல் என்னை இந்த பிரச்சினையில் இழுத்துள்ளார். அவரை சந்தித்து 'இன்று போய் நாளை வா' படத்தின் உரிமையை நான் கேட்டதாக சொல்லி உள்ளார்.

அதில் உண்மை இல்லை. பாக்யராஜை இதற்காக நான் சந்திக்கவே இல்லை. தமிழ் படங்களை தமிழிலேயே "ரீமேக்" செய்யும் வழக்கம் முன்பெல்லாம் கிடையாது. ஆனால் இப்போது அதை செய்ய தொடங்கி உள்ளனர்.

இது போல் படங்களை ரீமேக் செய்கிறவர்கள் அதன் கதைக்கான உரிமை யாரிடம் இருக்கிறதோ அவரை அணுகி வாங்கிக் கொள்கின்றனர்.

இன்று போய் நாளை வா படத்தை பொறுத்த வரை சட்டப்படி உறுதிப்படுத்திய பிறகே நான் வாங்கினேன். இதில் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளதாக பாக்யராஜ் நினைக்கிறார், அது தவறு.

யாரையும் ஏமாற்றும் எண்ணம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தும் நான் வரவில்லை. இந்த பிரச்சினையில் என்னை இழுத்தால் பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன் என்று கூறியுள்ளார்.