Press enter to see results or esc to cancel.

25ஆம் திகதி விஸ்வரூபம் வெளியாகிறது: கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் விஸ்வரூபம்.

இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளா‌ர். மேலும் இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய தொழில்யுக்தியை கையாண்டுள்ளார்.

கமலின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்த போதும், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

டி.டி.எச்.இல் படம் வெளியான தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், கமல் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர்.

இருந்தும் கமல் தனது டி.டி.எச். கொள்கையில் உறுதியாக இருந்தார். முன்னதாக படத்தை 11ம் திகதியும், டி.டி.எச்.இல் 10ம் திகதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

இந்தசூழலில் கமலுடன் திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து கமல் நேற்று தனது ராஜ்கமல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, விஸ்வரூபம் படத்‌தின் வெளியீட்டு திகதியை தள்ளி வைத்திருப்பதாகவும், இதுயாருடைய நிர்ப்பந்தத்தாலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார்.

அதேசமயம் டி.டி.எச்.இல் வெளியிடும் திட்டத்தை தான் ஒருபோதும் கைவிடப்போவது இல்லை என்று கூறினார். இதனிடையே தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளும் நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை விஸ்வரூபம் திரைப்படம் ஜனவரி 25ம் திகதி வெளியிடப்பட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படும் என்றும், டி.டி.எச் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.